ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 1 மே, 2022

திருப்பாவை (18) உந்து மத களிற்றன் ஓடாத தோள் !

யானைபோல் வலிமை உடையவர்நந்தகோபன் !

 --------------------------------------------------------------------------------------

உந்து  மதகளிற்றன்,  ஓடாத  தோள்வலியன்,

.........நந்தகோ  பாலன்  மருமகளே ! நப்பின்னாய் !

கந்தம்  கமழும்  குழலீ !  கடைதிறவாய் !

.........வந்தெங்கும்  கோழி  அழைத்தனகாண்  மாதவிப்

பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண் !

.........பந்தார்  விரலி உன்  மைத்துனன்  பேர்பாடச்

செந்தா  மரைக்கையால்  சீரார் வளையொலிப்ப

.........வந்து திறவாய் ! மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

 பொருள்:-

---------------

யானைபோல் வலிமை உடையவர், போரிலே புறங் காட்டாதவர் நந்தகோபன் !  அடி, நப்பின்னை !  அவரது மருமகளல்லவா நீ !  நறுமணக் கூந்தலுடைய நற்பதுமையே ! கொஞ்சம் கதவைத் திற ! எங்கும் கோழிகள் கூவுகின்றன; மாதவிக் கொடிப் பந்தலின் மேல் அமர்ந்து குயில்கள் கூவிக் கொண்டே இருக்கின்றன. பந்து விளையாடும் எழிலார் விரல்களுடைய ஏந்திழையே !  உன் மணவாளன் பேர் பாட வந்துள்ளோம் ! உன் தாமரைக் கைகள்  வளையொலி எழுப்ப, வந்து கதவைத் திற !

 

--------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

உந்து = வீசி எறிதல்; மதகளிறு = வலிமை மிக்க யானை; ஓடாத = போரில் புறங் காட்டாத; நப்பின்னாய் = நப்பின்னை என்று பெயர்படைத்தவளே !;கந்தம் = நறுமணம்; கழலீ = கூந்தல் உடையவளே; கடை திறவாய் = கதவைத் திற; வந்து எங்கும் = எங்கும்; கோழி அழைத்தன = கோழிகள் கூவுகின்றன; மாதவி = மல்லிகை; பல்கால் = வெகுநேரமாக; கூவினகாண் = கூவுகின்றன; பந்தார் =  பந்து விளையாடும்; விரலி = விரல்களை உடைவள்; உன் மைத்துனன் = உன் மணவாளன்; செந்தாமரைக் கை = செந்தாமரைக் கொடி போன்ற நீண்ட கைகள்; பேர் பாட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனின் புகழைப் போற்றிப் பாடி மகிழ்வோம் ! வா ! வந்து கதவைத் திறவாய் !

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 18]

{01-05-2022}

 -------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக