ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 2 மே, 2022

திருப்பாவை (17) அம்பரமே ! தண்ணீரே ! சோறே !

எங்கள் வானகமே ! குளிர்ந்த  நீரே  !

 --------------------------------------------------------------------------------------


அம்பரமே !  தண்ணீரே !  சோறே ! அறஞ்செய்யும்,

.........எம்பெருமான்  நந்த  கோபாலா !  எழுந்திராய் !

கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே !  குலவிளக்கே !

.........எம்பெருமாட்டி  யசோதா ! அறிவுறாய் !

அம்பரம்  ஊடறுத்து  ஓங்கி  உலகளந்த,

.........உம்பர்  கோமானே !  உறங்காது  எழுந்திராய் !

செம்பொன்  கழலடிச் செல்வா  பலதேவா !

.........உம்பியும்  நீயும்  உறஙகு ஏல்  ஓர் எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

 

எங்கள் வானகமே ! தண்மை பொருந்திய நீரே  ! அமுதமாய்த் திகழும் சோறே ! தருமத்தை நிலைநாட்டி உய்விக்க வந்த எம்பெருமானே ! நந்தகோபாலா ! எழுந்திராய் ! மங்கையர்க்கெல்லாம் மருக்கொழுந்து போன்ற குல விளக்கே ! எம்பெருமாட்டி ! யசோதா ! கேளம்மா ! வானத்தை முட்டி , மோதி இடித்து, ஓங்கி உலகளந்த தேவ தேவனே ! 


உறங்காது எழுந்திரு ! ஏ ! பலதேவா ! கண்ண பெருமானின் அண்ணனே ! செம்பொன் திருவடிச் செல்வா ! நீயும் உன் தம்பி கண்ணனும் உறங்கியது போதும்; எழுந்து வாருங்கள் !

 

--------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

அம்பரம் = வானம்; தண்ணீர் = குளிர்ந்த நீர்; சோறு = அமுதம் போன்ற அடிசிலே !; எழுந்திராய் = எழுவாயாக; கொம்பனார் = பெண்கள்; கொழுந்து = மருக்கொழுந்து; எம்பெருமாட்டி = எமது தலைவி; அறிவுறாய் = கேளாய்; அம்பரம் = வானம்; ஊடு அறுத்து = முட்டி, மோதி, இடித்து, உயர்ந்து உயர்ந்து சென்று ; ஓங்கி = நெடிய உருவம் எடுத்து


உலகு அளந்து = ஒரு காலை இந்த உலகத்திலும் மறுகாலை மாவலியின் தலை மீதும் வைத்து, இந்தப் பேருலகத்தையே அளந்த; உம்பர் = தேவர்கள்; கோமானே = தலைவனே; உறாங்காது எழுந்திராய் = உறங்கியது போதும், எழுந்து வாராய்; செம்பொன் = சிவந்த பொன் போன்ற ; கழல் அடி = கழல் என்னும் அணிகலன் அணிந்த காலகளை உடைய செல்வனே; உம்பியும் = உன் தம்பியும்; உறங்கேல் = இனியும் உறங்காதீர்கள்; எழுந்து வாருங்கள் !

 

--------------------------------------------------------------------------------------

 

 [ சோறு என்பது தான் தமிழ்ச் சொல் சாதம் என்பது வடசொல் ஆண்டாள், சாதம் என்று சொல்லாமல் சோறு என்று சொல்லி இருப்பதைக் கருத்தில் கொள்ளுங்கள் தமிழர்களே ! ]

 

--------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 19]

{02-05-2022}

--------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக