ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 27 ஏப்ரல், 2022

திருப்பாவை (19) குத்து விளக்கெரிய கோட்டுக்கால் !

 கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை !

 -------------------------------------------------------------------------------------

குத்து  விளக்கெரியக்  கோட்டுக்கால் கட்டிலின்மேல்

.........மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி,

கொத்தலர்  பூங்குழல் நப்பின்னை  கொங்கைமேல்,

.........வைத்துக் கிடந்த மலர்மார்பா !  வாய்திறவாய் !

மைத்தடங்  கண்ணினாய் !  நீயுன்  மணாளனை,

.........எத்தனை போதும்   துயிலெழ  ஒட்டாய்காண் !

எத்தனை ஏலும்  பிரிவாற்ற  கில்லாயால்

.........தத்துவம் அன்று தகவேலோர் ரெம்பாவாய் !

 

-------------------------------------------------------------------------------------

 பொருள்:-

---------------

 

குத்து விளக்கெரிய, யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டிலில், மெத்தென்றிருக்கும் பஞ்சு மெத்தையில், கொத்துமலர் சூடிய குழலாள் நப்பின்னை படுத்திருக்கிறாள். அவளது மார்பின் மேல் தலை வைத்துப் படுத்திருக்கும் மலர் மார்பா ! கண்ணா ! கொஞ்சம் வாய் திறந்து நப்பின்னையிடம் சொல்லையா !

 

மைவிழி மாதே ! நப்பின்னை ! நீ என்ன ஒரு பொழுதும் உன் மணவாளனை எழுந்திருக்கவே விட மாட்டாயா ? கட்டிப் பிடித்தே படுத்திருப்பாயா ? ஓகோ ! ஒரு கணம் கூட உன்னால் பிரிவைச் சந்திக்க முடியாதோ ! நல்லது ! இது வெறும் தத்துவமல்ல ! உனக்கு நியாயம் தான் ! எங்களையும் கொஞ்சம் கவனித்து அவனை எழுப்பி விடம்மா !

 

--------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

--------------------------

கோட்டுக் கால் = யானைத் தந்தத்தினால் ஆன கால்களை உடைய கட்டில்; பஞ்ச சயனத்தில் = பஞ்சு மெத்தையில் ; கொத்து அலர் = கொத்துக் கொத்தான மலர்;   பூங்குழல் = பூப்போன்ற மென்மையான தலை முடி; நப்பின்னை = கண்ணனின் மனைவியாகிய நப்பின்னை; கொங்கை மேல் = மார்பின் மேல்; வைத்துக் கிடந்த = தலை வைத்துப் படுத்திருக்கும்; மலர் மார்பா = மலர் மாலை அணிந்த மார்புடைய கண்ணா !; வாய் திறவாய் = வாய் திறந்து பேசு ஐயா!

 

மைத் தடங் கண்ணினாய் = மைவிழி மாதே !; எத்தனை போதும் = ஒரு பொழுதும்; துயில் எழ ஒட்டாய் காண்= எழுந்திருக்க விட மாட்டாயா ?; எத்தனை ஏலும் = சிறிது நேரம் கூட பிரிவு ஆற்றகில்லாய் = பிரிந்து இருக்க மாட்டாயா ; தத்துவமன்று = கணவனும் மனைவியும் துயில்வதில் கூட பிரியக் கூடாது என்பது வெறும் தத்துவம்அல்ல ; தகவு ; அதுதான் கற்பு என்னும் நல்லொழுக்கமும் கூட;  ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாடுவோம் , வாருங்கள் பாவையரே !

 

-------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ’

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 14]

{14-04-2022}

----------------------------------------------------------------------------------



 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக