ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 8 மே, 2022

திருப்பாவை (16) நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய !

ஆயர்குல நாயகன் நந்தகோபனின்  காவலனே !

 -------------------------------------------------------------------------------------

நாயகனாய் நின்ற  நந்த கோபனுடைய

.........கோயில் காப்பானே !  கொடித்தோன்றும்  தோரண

வாயில் காப்பானே மணிக்கதவம்  தாள்திறவாய் !

.........ஆயர்  சிறுமியரோமுக்கு  அறைபறை

மாயன் மணிவண்ணன்  நென்னலே  வாய்நேர்ந்தான் !

.........தூயோமாய்  வந்தோம்  துயிலெழப்  பாடுவான் !

வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா நீ!

.........நேய நிலைக்கதவம்  நீக்கு ஏல் ஓர்  எம்பாவாய் !

 

--------------------------------------------------------------------------------------

பொருள்:-

----------------

 

ஆயர்குல நாயகனாம் நந்தகோபனின் கோயில் காப்பவனே!  கொடித்  தோரண  வாயில் காப்பவனே !   மணிக் கதவைத் திறவாய் ! நாங்கள்  ஆயர்குலச் சிறுமியர் வந்திருக்கிறோம்.  பயப்படாதே ! 


அந்த மாயன், மணிவண்ணன் எங்கள் நோன்பு நிறைவேற ஒரு பரிசு தருவதாகச் சொல்லி இருக்கிறான்; அதனால் தான் வைகறையில் நீராடி முடித்து, தூயவர்களாக வந்திருக்கிறோம். எங்கள் நேயனது கோயில் நிலைக் கதவைக் கொஞ்சம் திற !

 

-------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------

 

நாயகனாய் = தலைவனாக; கொடித் தோன்றும் = கொடிகள் அலங்கரிக்கும்; மணிக் கதவம் = திறந்தால் சில்லென்று ஒலிக்கக் கூடிய மணிகள் பொருத்திய கதவு; தாள் = தாழ்ப்பாள்; ஆயர் = ஆயர்குல; சிறுமியரோம்= சிறுமியராகிய எங்களுக்கு; அறை பறை = பரிசு தருவதாகச் சொல்லி


நென்னலே = நேற்றே; வாய் நேர்ந்தான் = எங்களிடம் உரைத்தான்;  தூயோமாய் = நீராடி முடித்துத் தூயவர்களாக; வந்தோம் = வந்திருக்கிறோம்; துயிலெழப் பாடுவான் வாயால் = கண்ணனுக்குத் திருப்பள்ளி எழுச்சிப் பாட வந்துள்ளோம்;


வாயால் முன்ன முன்னம்  உன் வாயால் விரைவாக வாஎன்று ; மாற்றாதே அம்மா = (கோயில் காவலனாகிய) என்னிடம் அடிக்கடி  சொல்லாதே அம்மா; நேய = அன்பு கொண்டு; நிலைக்கதவம் நீக்க = கதவின் தாள் திறந்துவிடுகிறேன்; ஏல் ஓர் எம்பாவாய் ! அப்புறம் நீங்கள் கண்ணனை போற்றி வணங்கிப் பாடுங்கள் பாவையரே !

 

-------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ.

[திருவள்ளுவராண்டு: 2053, மேழம் (சித்திரை) 25]

{08-05-2022}

------------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக