ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 21 மே, 2022

திருப்பாவை (10) நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் !

ஏ ! அழகிய பெண்ணே ! எழுந்து வா !

 ----------------------------------------------------------------------------------------


நோற்றுச்  சுவர்க்கம்  புகுகின்ற  அம்மனாய்

.........மாற்றமும்  தாராரோ  வாசல்  திறவாதார்,

நாற்றத்  துழாய்முடி  நாராயணன்  நம்மால்

.........போற்றப் பறைதரும்  புண்ணியனால்  பண்டுஒருநாள்,

கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,

.........தோற்றும்  உனக்கே  பெருந்துயில்தான்  தந்தானோ !

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே !

.........தேற்றமாய் வந்து திற! ஏல்ஒர்  எம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------------------

 பொருள்:-

--------------

 

என்ன தூக்கமடி இது ? இப்படித் தூங்கித்தானே முன்பு கும்பகர்ணன் எமன் வாயில் வீழ்ந்தான். போரில் இராமனிடம் தோற்ற பின்பு , தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உன்னிடம் தந்துவிட்டானா ? மணம் பரப்பும் திருத் துழாய் மாலையை (துளசி மாலையை) மணிமுடியில் அணிந்திருக்கும் நாராயணன் நமது வெறும் பாடலை வாங்கிக் கொண்டு பரிசு தரும் புண்ணியன் அல்லவா ? அவனை எண்ணி நோன்பு நோற்றுச் சொர்க்கம் புக வேண்டும்.  இடைவிடாமல்  தூங்கும் ஏ! அழகிய பெண்ணே ! தூக்கக் கலக்கம் நீங்கி மெல்ல வந்து கதவைத் திற !

 

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

நோற்று = நோன்பு இருந்து; சுவர்க்கம் புகுகின்ற = சொர்க்கலோகம் செல்கின்ற  நல்வாய்ப்பைப் பெறவிருக்கும்; அம்மனாய் = பெண்ணே; மாற்றமும் = மறுமொழியும் ; தாராரோ = தருவாயோ; வாசல் திறவாதார் = வாசல் கதவைத் திறப்ப்பாயோ; நாற்றத் துழாய் = மணமுள்ள துளசி மாலை; முடி = அணிந்திருக்கின்ற; நம்மால் போற்றப் பறை தரும் = நமது வெறும் பாடலை வாங்கிக்கொண்டு  பரிசு தரும்;  புண்ணியனால் = புண்ணிய மூர்த்தியாகிய கண்ணனால்;

 

பண்டொரு நாள் = முன்பொரு காலத்தில் ; கூற்றத்தின் வாய் வீழ்ந்த = மடிந்து போன; கும்பகரணனும் = இராவணன் தம்பியாகிய கும்பகரணனும்; தோற்றும் = இராமனுடனான போரில் தோற்ற பின்பு; உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ = அவனிடமிருந்த பேருறக்கம் என்னும் பழக்கத்தை உனக்குத் தந்து விட்டானா; ஆற்ற அனந்தல் உடையாய் = உறக்கக் கலக்கத்தில் இருப்பவளே; அருங்கலமே = அழகிய பெண்ணே; தேற்றமாய் வந்து = தூக்கம் தெளிந்து வந்து; திறவேலோர் = கதவைத் திறவாய்; எம்பாவாய் = எமது பதுமை போன்ற பெண்ணே !

 

-----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 07]

{21-05-2022{

-----------------------------------------------------------------------------------------





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக