ஏ ! அழகிய பெண்ணே ! எழுந்து வா !
நோற்றுச்
சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
.........மாற்றமும்
தாராரோ வாசல் திறவாதார்,
நாற்றத்
துழாய்முடி நாராயணன் நம்மால்
.........போற்றப் பறைதரும் புண்ணியனால்
பண்டுஒருநாள்,
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்,
.........தோற்றும்
உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ !
ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே !
.........தேற்றமாய் வந்து திற! ஏல்ஒர் எம்பாவாய் !
-----------------------------------------------------------------------------------------
--------------
என்ன தூக்கமடி இது ? இப்படித்
தூங்கித்தானே முன்பு கும்பகர்ணன் எமன் வாயில் வீழ்ந்தான். போரில் இராமனிடம் தோற்ற
பின்பு , தன்னுடைய தூக்கத்தை எல்லாம் உன்னிடம்
தந்துவிட்டானா ? மணம் பரப்பும் திருத் துழாய் மாலையை (துளசி
மாலையை) மணிமுடியில் அணிந்திருக்கும் நாராயணன் நமது வெறும் பாடலை வாங்கிக் கொண்டு
பரிசு தரும் புண்ணியன் அல்லவா ? அவனை எண்ணி
நோன்பு நோற்றுச் சொர்க்கம் புக வேண்டும்.
இடைவிடாமல் தூங்கும் ஏ! அழகிய
பெண்ணே ! தூக்கக் கலக்கம் நீங்கி மெல்ல வந்து கதவைத் திற !
-----------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
நோற்று = நோன்பு இருந்து; சுவர்க்கம் புகுகின்ற = சொர்க்கலோகம்
செல்கின்ற நல்வாய்ப்பைப் பெறவிருக்கும்; அம்மனாய் = பெண்ணே; மாற்றமும் =
மறுமொழியும் ; தாராரோ = தருவாயோ; வாசல்
திறவாதார் = வாசல் கதவைத் திறப்ப்பாயோ; நாற்றத்
துழாய் = மணமுள்ள துளசி மாலை; முடி = அணிந்திருக்கின்ற; நம்மால் போற்றப் பறை தரும் = நமது வெறும்
பாடலை வாங்கிக்கொண்டு பரிசு தரும்;
புண்ணியனால் = புண்ணிய
மூர்த்தியாகிய கண்ணனால்;
பண்டொரு நாள்
= முன்பொரு காலத்தில் ; கூற்றத்தின் வாய் வீழ்ந்த = மடிந்து போன; கும்பகரணனும் = இராவணன் தம்பியாகிய
கும்பகரணனும்; தோற்றும் = இராமனுடனான போரில் தோற்ற பின்பு; உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ =
அவனிடமிருந்த பேருறக்கம் என்னும் பழக்கத்தை உனக்குத் தந்து விட்டானா; ஆற்ற அனந்தல் உடையாய் = உறக்கக் கலக்கத்தில்
இருப்பவளே; அருங்கலமே = அழகிய பெண்ணே; தேற்றமாய் வந்து = தூக்கம் தெளிந்து வந்து; திறவேலோர் = கதவைத் திறவாய்; எம்பாவாய் = எமது பதுமை போன்ற பெண்ணே !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 07]
{21-05-2022{
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக