ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 23 மே, 2022

திருப்பாவை (09) தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய !

மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு  எரிகிறது !

 ----------------------------------------------------------------------------------

தூமணி  மாடத்துச்  சுற்றும்  விளக்கெரிய,

.........தூபம்  கமழ,  துயிலணைமேல் கண்வளரும்

மாமான்  மகளே  மணிக்கதவம்  தாள்திறவாய் !

.........மாமீர்  அவளை  எழுப்பீரோ  உம்மகள்தான்,

ஊமையோ  அன்றிச்  செவிடோ  அனந்தலோ ?

.........ஏமப்  பெருந்துயில்  மந்திரப்  பட்டாளோ ?

மாமாயன்  மாதவன்  வைகுந்தன்  என்றென்று

.........நாமம் பலவும் நவின்றுஏல்ஓர்  எம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

 

அழகிய மாணிக்கங்கள் அமைந்த மாடத்தில் நான்கு பக்கமும் விளக்கு  எரிகிறது ! அகில் புகை எழுந்து எங்கும் மணம் பரப்புகிறது ! பஞ்சணையில் உறங்கிக் கொண்டிருக்கும் எங்கள் மாமன் மகளே ! மணிக் கதவைக் கொஞ்சம் திற ! எங்கள் மாமியரே ! அவளைக் கொஞ்சம் எழுப்புங்கள் !

 

உங்கள் மகள் என்ன ஊமையா ? செவிடா ? அல்லது தூங்கு மூஞ்சியா ? உறக்க மயக்கத்தில் கட்டுண்டு கிடக்கிறாளா ? அந்த மா மாயன் வைகுந்தன் வருகிற வேளையில் தூங்கி வழிகிறாளே ! அவனைப் பாடி வணங்குவதற்கு அவளை எழுப்புங்கள் !

 

------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

-------------------------

 

தூ மணி மாடம் = அழகிய மேல் மாடம்; சுற்றும்= நாலாபுறமும்; தூபம் = நறும்புகை மணம்; துயில் அணை = உறங்கும் பஞ்சு மெத்தை; கண் வளரும் = கண் மூடித் தூங்கும்; தாள் = தாழ்ப்பாள்; மாமீர் = மாமன் மனைவியரான மாமிகளே ; எழுப்பீரோ = எழுப்புங்களேன்; உம் மகள் = உங்கள் மகள்; ஊமையோ = வாய் பேசாதவளோ; செவிடோ = காது கேளாதவளோ; அனந்தல் = உறக்க மயக்கம்; ஏமம் = துயிலறை

 

பெருந்துயில் = ஆழ்ந்த உறக்கம்; மந்திரப் படுதல் = கட்டுண்டு கிடத்தல்; மா மாயன் = மாயத் திருவிளையாடல்கள் புரிபவன்; மாதவன் வைகுந்தன் = மாதவன் என்றும் வைகுந்தன் என்றும் சொல்லப்படும் கண்ணனின் ; நாமம் பலவும் நவின்று = பெயர்களைச் சொல்லி; ஏல் = துயில் எழுந்து; ஓர் = அவனைப் பாடி வணங்குவாய் ! எம்பாவாய் = எமது பதுமை போன்ற அழகிய பெண்ணே !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 09]

{23-05-2022}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக