கள்ளங்
கவடற்ற பொற்கொடியே ! புனமயிலே !
கற்றுக்
கறவைக் கணங்கள் பலகறந்து
.........செற்றார்
திறல் அழியச் சென்று
செருச்செய்யும்
குற்றமொன்று இல்லாத
கோவலர்தம் பொற்கொடியே!
.........புற்றரவு
அல்குல் புனமயிலே ! போதராய் !
சுற்றத்துத் தோழிமார்
எல்லாரும் வந்துநின்
.........முற்றம்
புகுந்து முகில்வண்ணன் பேர்பாட,
சிற்றாதே !
பேசாதே ! செல்வப் பெண்டாட்டிநீ !
.........எற்றுக்கு
உறங்கும் பொருள் ஏல்ஓர் எம்பாவாய்
!
----------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
கண்ணனைப் பகைத்தவர்கள் எல்லாம் எங்கள்
பகைவர்கள் என்று கருதுபவர்கள் யாதவர்.
அவர்களோடு போர் புரிந்து வெல்லுவார்.
கள்ளங் கவடமற்ற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஏ ! பொற்கொடியே ! நாகப் படம்
போன்ற பீடம் உடையவளே !
உனது உறவுப் பெண்கள் எல்லாம்
வந்திருக்கிறோம். அந்தக் கார் மேக வண்ணன் பேர் பாட முற்றத்தில் நின்று கொண்டிருக்கிறோம். நீயும் எங்களோடு
சேர்ந்து கொள்ள வேண்டியவள் தானே ! நீ கண்ணனது செல்லப் பெண்டாட்டி ஆயிற்றே ! பின்
எதற்காக உறங்குகிறாய் ? எழுந்து வா !
-----------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
--------------------------
கற்று = கன்றுக்குட்டி; கறவை =பால் கறக்கும் பசு; கணங்கள் = கூட்டம்; பல கறந்து =
பலவற்றைக் கவர்ந்து சென்று;
செற்றார் = பகைவர்; திறல் = வலிமை; செரு = போர்; குற்றம் = கெட்ட பெயர்; கோவலர் = ஆயர் குலத்தினர்; பொற்கொடி = அழகிய பெண்; புற்று = பாம்புகள் வாழும் மண் புற்று; அரவு அல்குல் = பாம்பு படம் விரித்தாற்
போன்று தோற்றம் உடைய பீடம்;
புனமயில் = ஆயர்பாடி என்னும் கழனி வாழ் மயில்; போதராய் = வருவாயாக !; சுற்றத்துத் தோழிமார் = உறவுப் பெண்கள் ; நின் முற்றம் புகுந்து = உன் வீட்டின் முன் நிற்கிறார்கள்; சிற்றாதே = மனம் சஞ்சலப் படாதே !; பேசாதே = வேறு பேச்சு வேண்டாம்;
செல்வப் பெண்டாட்டி நீ = கண்ணனின் ஆசை மனைவி
அல்லவா நீ; எற்றுக்கு = எதற்காக; உறங்கும் பொருள்= இன்னும் உறங்குகிறாய், நீ உறங்குவதில் பொருளில்லை.; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் போற்றிப்
பாடுவோம் வாராய் பதுமை போன்ற பெண்ணே !
-----------------------------------------------------------------------------------------
ஆக்கம் + இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப் பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 06]
{20-05-2022}
-----------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக