கன்றை நினைத்து
எருமை பாலைச் சொரிகிறது !
கனைத்திளங் கற்றெருமை
கன்றுக் கிரங்கி
.......நினைத்து முலைவழியே
நின்று பால்சோர,
நனைத்தில்லம் சேறாக்கும்
நற்செல்வன் தங்காய் !
.......பனித்தலை
வீழநின் வாசற் கடைப்பற்றிச்
சினத்தினால்
தென்னிலங்கைக் கோமானைச் செற்ற,
.......மனத்துக்
கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய் !
இனித்தா னெழுந்திராய் ஈதென்ன பேருறக்கம் ?
.......அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய் !
-------------------------------------------------------------------------------------
பொருள்:-
----------------
எருமை ஒன்று
தன் கன்றை நினைத்து ஏங்குகிறது ! அந்த ஏக்கம் காரணமாக கன்று அங்கு இல்லாத போதே
பால் சொரியத் துவங்குகிறது ! அதனால் வீடு முழுவதும் சேறாகிவிடுகிறது ! நாங்கள்
தான் பார்த்தோமே ! அந்த வீட்டுக்குடைய யாதவச் செல்வன் மகளே ! அடி பாவாய் ! வெளியே
பனி கொட்டு கொட்டென்று கொட்டுகிறதடி !
உன் வீடு
பாலால் நனைந்தது போல், எங்கள் தலை பனியால் நனைந்துவிட்டது ! வாசலிலே நின்றுகொண்டிருக்கிறோம்.
அன்று கோபத்தால் வில்லெடுத்து இராவணனை வென்ற கோவிந்தனைப் பாட வேண்டுமடி ! என்ன
இந்த உறக்கம் ! எழுந்து வந்து கதவைத் திற !
-------------------------------------------------------------------------------------
சொற்பொருள்:-
-------------------------
கனைத்து =
வாயினால் ஒலி எழுப்பி; இளங் கற்று எருமை = மிக அணிமையில் கன்று ஈன்ற எருமை; கற்றுக்கு
இரங்கி = கன்றை நினைத்து ஏங்கி; முலை வழியே நின்று பால் சோர = மடியிலிருந்து தானாகப்
பால் சொரிய; நனைத்து இல்லம் சேறாக்கும் = இல்லமெலாம் பாலினால் சேறாக;
நற்செல்வன்
தங்காய் = ஆயர் இனச் செல்வனின் தங்கையே !; பனித்
தலை வீழ = பனி கொட்டி தலையெலாம் நனைந்து போக; நின்
வாசற் கடைப் பற்றி = நின் இல்லத்தின் வாசலில் நிற்கின்றோம்; சினத்தினால் = சீதையைக் கவர்ந்து சென்ற சினத்தினால் ; தென்னிலங்கைக்
கோமானை = இலங்கை அரசனாகிய இராவணனை;
செற்ற =
போரிட்டுக் கொன்ற; மனத்துக்கு இனியானை = மனதுக்கு இனியவனாகிய இராமனாக
அவதாரம் எடுத்திருந்த கண்ணனை; பாடவும் நீ வாய் திறவாய் = பாடிப் பரவ வேண்டும், எழுந்திராய்; இனி
தான் எழுந்திராய் = தானாக எழுந்து வா !;
ஈதென்ன
பேருறக்கம் = இது என்ன அப்படி ஒரு கும்பகர்ணத் தூக்கம்; அனைத்து
இல்லத்தாரும் = எல்லா வீட்டினரும் ; அறிந்து =
பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனை போற்றிப் பாட வேண்டும், எழுந்து
வா அருமைப் பெண்ணே ! எழுந்து கதவைத் திற !
------------------------------------------------------------------------------------
ஆக்கம் +
இடுகை:
வை.வேதரெத்தினம்,
(vedarethinam70@gmail.com)
ஆட்சியர்,
”தமிழ்ப்
பாவை” வலைப்பூ,
[திருவள்ளுவராண்டு:
2053, விடை (வைகாசி) 04]
{18-05-2022}
------------------------------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக