ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

புதன், 1 ஜூன், 2022

திருப்பாவை (00) வெளியீட்டு முன்னுரை!


நண்பர்களே !

 

தமிழே இனிமையானது. தமிழ்க் கவிதைகளோ இன்னும் இனிமையானவை ! கவிதையைச் சுவைப்பது என்பது ஒரு கலை ! நெஞ்சு பொறுக்குதில்லையே ! இந்த நிலை கெட்ட மனிதரை நினைந்து விட்டால் !என்பது போன்ற பாரதியாரின் பாடல்களில் எனக்கு ஒரு மயக்கமுண்டு !

 

தமிழுக்கும் அமுதென்று பேர் ! அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர் !எனக் குழையும் பாரதிதாசன் பாடல்களிலும் எனக்கு அளவு கடந்த ஈர்ப்பு உண்டு !

 

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்; பசியினால் இளைத்தே வீடுதோறும் இரந்தும் பசியறாது அயர்ந்த வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்என்பது போன்ற வடலூர் வள்ளலாரின் பாடல்களில் எனக்கு ஒரு தீராத வேட்கை உண்டு !

 

அற்றைத் திங்கள் அவ்வெண் நிலவில்என்பது போன்ற  புறநானூற்றுப் பாடல்களின் சொல்லாடலில் எனக்குச் சிந்தை நிறைகின்ற பொந்திகை (மன நிறைவு) நிரம்பவுண்டு !

 

எல்லே இளங்கிளியே ! இன்னும் உறங்குதியோ?” என்பன போன்ற ஆண்டாள் நாச்சியாரின் தமிழ்க் கனிச் சுவையில் இணையற்ற ஈடுபாடும் உண்டு !

 

மார்கழித் திங்கள் பிறந்ததும் வைணவத் திருத் தலங்களில் திருப்பாவையின்  இன்னொலி இளங் காற்றில் மெல்ல மிதந்து வரும். அதன் இசையும் சொற்சுவையும் கேட்பாரைப் பிணிக்கும் தன்மையன !

 

நண்பர்களே !  ஆண்டாள் திருமொழியை அள்ளிப் பருகிட வாருங்கள் ! திருப்பாவையில் இடம் பெற்றுள்ள தேன் தமிழ்ச் சொற்களைச் சுவைத்து மகிழ உங்களை அன்புடன் அழைக்கிறேன் !

 

------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 18]

{01-06-2022}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக