ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 28 மே, 2022

திருப்பாவை (06) புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் !

வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது !

 --------------------------------------------------------------------------------------

புள்ளும்  சிலம்பினகாண்  புள்ளரையன்  கோயிலில்

.........வெள்ளை  விளிசங்கின்  பேரரவம் கேட்டிலையோ !

பிள்ளாய் எழுந்திராய் ! பேய்முலை நஞ்சுண்டு,

.........கள்ளச் சகடம் கலக்கழிய,  காலோச்சி,

வெள்ளத்து அரவில்  துயிலமர்ந்த வித்தினை,

.........உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்,

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்,

.........உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோ  ரெம்பாவாய் !

 

----------------------------------------------------------------------------------------

பொருள்:-

---------------

இதோ, பறவைகள் பாடுகின்றன ! கருடன் என்னும் பறவைக்கு அரசன் அல்லவா, நம் கண்ணன் ! அவன் கோவிலில் உள்ள வெள்ளைச் சங்கு இன்னிசை ஒலி எழுப்புகிறது ! அது உன் காதுகளுக்குக் கேட்கவில்லையா ?  ஏ ! பேதைப் பெண்ணே ! எழுந்திரு ! அரக்கர் குலக் கொடும் பெண்ணான பூதகியின் மார்பில் பாலுண்பது போலப் பாசாங்கு செய்து அவளது உயிரை உறிஞ்சிக் கொன்றவன் நம்  கண்ணன் !

 

 

கள்ளத் தனமாக சக்கர வடிவில் வந்த சகடாசுரனைக் காலால் உதைத்து எறிந்தவன் ! பாற்கடல் வெள்ளத்தில் பாம்பணையில் பள்ளி கொண்டவன் அவன் ! அந்த மூல விதையை மனதில் வைத்து முனிவர்களும், யோகிகளும் மெள்ள எழுந்து அரி !  அரி ! என்று அழைக்கிறார்கள் அந்தப் பேரொலி கேட்டு உன் உள்ளம் குளிரவில்லையா ? அந்தக் கண்ணனைப் போற்றிப் பாடி வணங்கிடுவோம் வாரீர் !

 

-----------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

-------------------------

 

புள்ளும் சிலம்பின = பறவைகள் எல்லாம் ஒலி எழுப்பிக்கொண்டு பறக்கின்றன; புள்ளரையன் கோயிலில் = பறவைகளின் அரசனாகிய கருடனை வாகனமாகக் கொண்ட கண்ணபிரான் கோயிலில்; வெள்ளை விளி சங்கின் = வெண்ணிறச் சங்குகளின்; பேரரவம் = முழக்க ஒலி; கேட்டிலையோ உனக்குக் கேட்கவில்லையா ? பிள்ளாய் = பெண்ணே ! பேய் முலை நஞ்சு உண்டு = பூதகி என்னும் அரக்கியின் மார்பில் நச்சுப் பால் உண்டு;

 

சகடம் = சக்கரம்; கலக்கழிய = அழிந்து போகுமாறு; கால் ஓச்சி = காலால் உதைத்து ; வெள்ளத்து = பாற்கடல் நீரில்; அரவில் = பாம்புப் படுக்கையில்; துயிலமர்ந்த = துயில் கொண்ட ; வித்தினை = மூல விதை போன்றவனை; உள்ளத்துக் கொண்டு = மனதில் எண்ணி; மெள்ள எழுந்து = எழுந்து நின்று ; அரி என்ற பேரரவம் =அரி, அரிஎன்று உச்சரிக்கின்ற பேரொலி; உள்ளம் புகுந்து = உன் உள்ளத்தில் புகுந்து; குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய் = மனதை நெகிழ வைக்க, கண்ணனைப் போற்றிப் பாடி வணங்குவாயாக !

 

----------------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 14]

{28-05-2022}

----------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக