ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

திருப்பாவை (26) மாலே ! மணிவண்ணா ! மார்கழி நீர் !

திருமாலே ! மணிவண்ணா ! என்ன வேண்டும், என்று கேட்கிறாயா ?

 ---------------------------------------------------------------------------


மாலே  மணிவண்ணா  மார்கழிநீர்  ஆடுவான்

......மேலையார்  செய்வனகள்  வேண்டுவன  கேட்டியேல்

ஞாலத்தை  எல்லாம்  நடுங்க  முரல்வன

......பாலன்ன  வண்ணத்து  உன்பாஞ்ச சன்னியமே

போல்வன  சங்கங்கள்  போய்ப்பாடு  உடையனவே

......சாலப்  பெரும்பறையே  பல்லாண்டு  இசைப்பாரே

கோல  விளக்கே  கொடியே  விதானமே

......ஆலின்  இலையாய்  அருளேலோர்  எம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

திருமாலே ! மணிவண்ணா ! மார்கழி நீராடுவதற்கு என்ன வேண்டும், என்று கேட்கிறாயா ? வேறொன்றும் வேண்டாம்; பூமியே அதிரும்படி ஒலிக்கிறதே, உன் சங்கு பாஞ்ச சன்னியம் அதுபோல சில சங்குகள் வேண்டும். மிகப் பெரிய இசைக்கருவிகள் வேண்டும். அவற்றை முழக்கி, அகங்காரத்தை விலக்கி நாங்கள் பல்லாண்டு பாட வேண்டும் ! கோல விளக்கே ! கொடியே ! விதானமே ! ஆலிலைக் கண்ணா ! அருள் புரிய மாட்டாயா ?

 

----------------------------------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

--------------------------

 

மார்கழி நீராடுவான் = மார்கழி நீராடுவதற்கு; மேலையார் = இனிமேல்; செய்வனகள் வேண்டுவன = என்ன செய்ய வேண்டும் என ; கேட்டியேல் = கேட்பாயானால்; ஞாலத்தை = இந்த உலகத்தை நடுங்க முரல்வன = நடுக்கம் கொள்ளச் செய்யும் வகையில் உரத்து முழங்கும்; பால் அன்ன = பால் போன்ற வெள்ளையான ; உன் பாஞ்சசன்னியமே = உன் கைகளில் தவழும் சங்கு ; போல்வன சங்கங்கள் = அதைப் போன்ற சில சங்குகள் ; போய்ப் பாடு உடையனவே = கொண்டு முழங்க வேண்டும்; சாலப் பெரும் பறையே = பெரிய பறை போன்ற இசைக் கருவிகளை இயக்கி;

 

பல்லாண்டு இசைப்பாரே = உன்னை வாழ்த்தி பல்லாண்டு பல்லாண்டு வாழ்கவெனப் பாட வேண்டும்; கோல விளக்கே = அழகிய திருவிளக்கு போன்றவனே ! கொடியே = அலங்காரக் கொடிபோன்ற நெடுமாலே ! விதானமே = சுடர்விடும் பன்மணித் திரளே ! ஆலின் இலையாய் = ஆலிலை மேல் பாற்கடலில் துயின்ற மணிவண்ணா ! அருள் = அருள் புரிவாயாக ! ஏல் ஓர் எம்பாவாய் = வாருங்கள் பாவையரே கண்ணனைப் பாடி வணங்குவோம் !

 

----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை

வை. வேதரெத்தினம்,

(vedarethinam70@gmai.com)

ஆட்சியர்.

”தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 20]

{03-4-2022}

---------------------------------------------------------------------------- 







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக