ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

சனி, 9 ஏப்ரல், 2022

திருப்பாவை (24) அன்றிவ்வுலகம் அளந்தாய் !

இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய் !

 ---------------------------------------------------------------------------

 

அன்றுஇவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !

...செங்குன்றத் தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ்போற்றி !

...கன்று குணிலா வெறிந்தாய் கழல்போற்றி !

குன்று குடையாய் எடுத்தாய்  குணம்போற்றி !

...வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல்போற்றி !

என்றென்றுன்  சேவகமே  ஏத்திப்  பறைகொள்வான்,

...இன்றுயாம்  வந்தோம்  இரங்கேலோர் எம்பாவாய் !

 

------------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

அன்று இவ்வுலகத்தை வாமனனாய் வந்து அளந்தாய்; இராமனாக இலங்கைக்குச் சென்று வென்றாய்;  சகடாசுரனை உதைத்தாய்; கன்றின் வடிவெடுத்து வந்தான் வத்சாசுரன்,; கன்றைத் தூக்கி வீசி அவனைக் கொன்றாய் ! கோவர்த்தனகிரியைக் குடையாக எடுத்தாய் ! எதிரியை வெல்லுவது உன் கையில் உள்ள வேல் ! என்றும் உனக்குப் பணி செய்து  புகழ் பெறவே இன்று நாங்கள் வந்திருக்கிறோம். அதற்கு இடம் கொடு ! எம்மை ஏற்றுக் கொள் !

 

-------------------------------------------------------------------------------

 சொற்பொருள்:-

--------------------------

 

இவ்வுலகம் அளந்தாய் = வாமன அவதாரம் எடுத்து, மூன்றடி மண் கேட்டு, இவ்வுலகத்தை ஒரு அடியாலும், மேலுலகை இன்னொரு அடியாலும் அளந்து, மூன்றாவது அடியை மாவலியின் தலை மீது வைத்து அழுத்தி அவனைக் கொன்றவனே ! அடி போற்றி = உன் காலடிகளை வணங்கிப் போற்றுகிறோம் ! .தென்னிலங்கை சென்றங்கு செற்றாய் = தெற்கே உள்ள இலங்கைக்குச் சென்று அங்கு இராவணனைப் போரில் வென்று அழித்தாய் !

 

திறல் போற்றி = உன் வெற்றியைப் போற்றி வணங்குகிறோம் ! பொன்றச் சகடம் உதைத்தாய் = சக்கர வடிவம் எடுத்து வந்த சகடாசுரனைக் காலால் உதைத்துக் கொன்றாய் ! புகழ் போற்றி =  உன் புகழைப் போற்றி வணங்குகிறோம் ! கன்று குணிலா வெறிந்தாய் = கன்றின் உருவத்தில் வந்த வத்சாசுரனைக் குறுந்தடியாக்கித் தூக்கி எறிந்து கொன்றவனே ! உன் கழல்களைப் போற்றி வணங்குகிறோம் !

 

மழை கொட்டோ கொட்டென்று கொட்டி ஊழிப் பெருவெள்ளமாய்ப் பெருக்கெடுத்து ஆயர் குலத்தை வருத்தியபோது, கோவர்த்தன மலையைத் தூக்கிக் குடையாகப் பிடித்து அவர்களைக் காத்தவனே ! உன் அருட்குணத்தைப் போற்றி வணங்குகிறோம் !

 

பகைவர்களை எல்லாம் வென்றொழிக்கும் உன் கையிலுள்ள வேலினைப் போற்றி வணங்குகிறோம்! என்றென்றும் உன் தாளடியில் கிடந்து பணி செய்ய எங்களுக்கு வரமருள்வாய் ! இதற்காகவே இன்று இங்கு வந்துள்ளோம்! மனம் இரங்கிடுவாய்  மணிவண்ணா !

 

-------------------------------------------------------------------------------

 ஆக்கம் + இடுகை

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு :2053, மீனம் (பங்குனி) 26]

{09-04-2022}

-------------------------------------------------------------------------------



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக