ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 28 மார்ச், 2022

திருப்பாவை (28) கறவைகள் பின்சென்று கானம் !

கட்டுச் சோறு  கொண்டு போய்க் காட்டிலே அமர்ந்து   உண்பவர்கள் !

 

கறவைகள் பின்சென்று கானம்சேர்ந் துண்போம் !

.....அறிவொன்று  மில்லாத ஆய்க் குலத்து  உன்றன்னைப்

பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்,

.....குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன்றன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,

.....அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்றன்னை,

சிறுபே ரழைத்தனவும் சீறி அருளாதே !

.....இறைவா ! நீதாராய் பறையலோ ரெம்பாவாய் !

 

-----------------------------------------------------------------------------

 பொருள்:-

----------------

 

ஏ ! கண்ணா ! நாங்கள் ஆடு, மாடு மேய்ப்பவர்கள்.  கட்டுச் சோறு கட்டிக் கொண்டு போய் காட்டிலே சாப்பிடுபவர்கள். அறிவில்லாத அப்பாவிகள் !

 

நாங்கள் ஆயர் குலத்தவர்கள். நீ எங்கள் குலத்தில் பிறப்பு எடுத்ததற்கு  நாங்கள் எவ்வளவோ புண்ணியம் செய்திருக்கிறோம். நீ குறை இல்லாதவன்; நற்குணங்கள் படைத்த கோவிந்தன்; இனி நம்முடைய உறவை யாரும் விலக்க முடியாது !

 

நாங்கள் அறியாதவர்கள் ! அன்பினாலே உன்னைப் பேர் சொல்லி அழைத்திருந்தாலும், ஒருமையில் பேசி   இருந்தாலும்   கோபப்படாதே  !  இறைவா  !   எங்களுக்கு  அருள் புரிவாய் !!

 

------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

---------------------------

 

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம் = கறவை மாடுகளை மேய்ச்சலுக்குக் காட்டுக்கு  அழைத்துச் சென்று, அங்கேயே பகலெல்லாம் தங்கி கட்டுச் சோற்றினை உண்போம். அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து = ஆயர் குலத்தவர்களான நாங்கள் அறிவில்லாத அப்பாவிகள் ; உன்றன்னை = உன்னை; பிறவிப் பெறுந்தனை = எங்கள் குலத்தில் வந்து நீ பிறந்தமைக்கு ;

 

புண்ணியம் யாமுடையோம் = நாங்கள் மிகுந்த புண்ணியம் செய்திருக்கிறோம்குறைவொன்றுமில்லாத கோவிந்தா = நீ குறை இல்லாதவன்; உன்றன்னோடு உறவேல் = எங்கள் குலத்தில் வந்து பிறந்துவிட்டமையால் நீ எங்களுக்கு உறவினன் ஆவாய்; நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது = நம்முடைய உறவை யாராலும் பிரிக்க முடியாது ;

 

அறியாத பிள்ளைகளோம் = நாங்கள் அறியாத பிள்ளைகள் ; அன்பினால் உன்றன்னை = உன் பேரில் உள்ள அன்பின் மிகுதியால் ; சிறு பேர் அழைத்தனவும் = உன்னைப் பெயர் சொல்லி அழைத்திருந்தாலும் ; சீறி அருளாதே = எங்கள் மீது கோபம் கொள்ளாதே; இறைவா நீ தாராய் பறையே = கண்ணா நீ எங்களுக்கு அருள் புரிய வேண்டும்; ஏல் ஓர் எம்பாவாய் = கண்ணனைப் பாடி வணங்குவோம் பாவையரே வாருங்கள் !


-----------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:-

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[தி.ஆ: 2053, மீனம் (பங்குனி) 14]

{28-03-2022}

------------------------------------------------------------------------------




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக