ஆண்டாள் அருளிய அழகுத் தமிழ்ப் பூக்கள் !

விரும்பும் பதிவைத் தேடுக !

திங்கள், 30 மே, 2022

திருப்பாவை (04) ஆழி மழைக் கண்ணா !

என் கண்ணா ! கடலும் நீயே ! மழையும் நீயே !

 ----------------------------------------------------------------------------------


ஆழி  மழைக்கண்ணா  ஒன்றுநீ  கைகரவேல்

.........ஆழி  யுட்புக்கு  முகந்துகொ  டார்த்தேறி

ஊழி  முதல்வன்   உருவம்போல்  மெய்கறுத்து

.........பாழியந்  தோளுடைப்  பத்மநா  பன்கையில்

ஆழிபோல்  மின்னி  வலம்புரிபோல்  நின்றதிர்ந்து

.........தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்

வாழ  உலகினில்  பெய்திடாய்  நங்களும்

.........மார்கழி  நீராட  மகிழ்ந்தேலோ  ரெம்பாவாய் !

 

------------------------------------------------------------------------------------

பொருள்:-

--------------

 

என் கண்ணா ! கடலும் நீயே ! மழையும் நீயே !  ஒன்று சொல்கிறேன்; கடலிலே புகுந்து நீ தண்ணீரை எடுக்கிறாய்; மள மளவென வானத்தில் ஏறுகிறாய்; ஊழிக் காலத்தின் முதல்வனகிய திருமாலைப் போல் கார் கறுத்து மேகமாகி  விடுகிறாய்;

 

அந்த திருமாலாகிய பதமநாபன் கையிலுள்ள சக்கராயுதம் போல் மின்னி, சங்கு போல் ஒலி எழுப்பி, எப்போதுமே தாழ்ந்து பழக்கமில்லாத அவனது சாரங்க வில்லிலிருந்து புறப்பட்ட அம்புகள் போல் பூமியில் மழையாகப் பொழிகிறாய் ! இப்போதும் பொழிய வாராய், நாங்களும் மார்கழி நீராட வேண்டுமல்லவா !

 

------------------------------------------------------------------------------------

சொற்பொருள்:-

------------------------

 

ஆழி = கடல் (கடலும் நீயே); மழை = மழையும் நீயே ; கண்ணா = கண்ணனே!; ஒன்று = ஒன்று சொல்கிறேன்; கைகரவேல் = நீ ஒளிக்காதே ! ; ஆழியுட் புக்கு = கடலில் புகுந்து; முகந்து கொடு = நீரினை முகந்து கொண்டு ; ஆர்த்து ஏறி = ஒலி எழுப்பி மேலே செல்கிறாய்; ஊழிமுதல்வன் = திருமால்;

 

உருவம் போல் = மேனியைப் போல; மெய் கறுத்து = கரிய நிறம் அடைந்து;  பாழி = கடல் போன்ற மேகமாகி விடுகிறாய். அம் = அழகிய ; தோளுடைய = தோள்களையுடைய; பத்மநாபன் = தாமரைப்பூவைத் தன் உந்தியிலே கொண்டுள்ள திருமால்; கையில் ஆழி போல் = கையில் விளங்குகின்ற சுதர்சனம் என்னும் சக்கரப் படையைப் போல; மின்னி = ஒளி வீசி; வலம்புரி போல் = வலம்புரிச் சங்கு போல;

 

நின்றதிர்ந்து = ஒலி எழுப்பி; தாழாதே = எப்போதும் தாழ்ந்து பழக்கமில்லாத; சார்ங்கம் = திருமால் கையில் உள்ள சாரங்கம் என்னும் வில்; உதைத்த சர மழை போல் = விடுபட்ட அம்புகள் போல ; வாழ உலகினில் பெய்திடாய் = இந்த உலகம் வாழ்ந்திடப் பூமியில் மழையாகப் பொழிகிறாய், இப்போதும் பொழிய வாராய் ; மகிழ்ந்து ஏல் ஓர் = மகிழ்ந்து கண்ணனைப் போற்றி வணங்குவோம்; பாவாய் = பதுமை போன்ற பெண்களே.

 

-----------------------------------------------------------------------------------

ஆக்கம் + இடுகை:

வை.வேதரெத்தினம்,

(vedarethinam70@gmail.com)

ஆட்சியர்,

தமிழ்ப் பாவை” வலைப்பூ,

[திருவள்ளுவராண்டு: 2053, விடை (வைகாசி) 16]

{30-05-2022}

------------------------------------------------------------------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக